தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், அடுத்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வீடு திரும்புவார் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத நாயக் தெரிவித்தார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிக்கரை வெள்ளிக்கிழமை சந்தித்த பின்னர், செய்தியாளர்களிடம் ஸ்ரீபாத நாயக் கூறியதாவது:
கோவா ஆட்சி நிர்வாகம் குறித்து பாரிக்கருடன் ஆலோசனை நடத்தினோம். தீபாவளி பண்டிகையையொட்டி அவர் கோவா திரும்புவார் என்று எதிர்பார்க்கிறோம். கோவா கேபினட் அமைச்சர்களுக்கு கூடுதல் துறைகளை அளிப்பதுகுறித்தும் விவாதிக்கப்பட்டது.
கோவா முதல்வராக பாரிக்கர் தொடர்ந்து நீடிப்பார். உடல் நலம் தேறி அவர் மீண்டும் தனது பணியைத் தொடங்குவார் என்றார் ஸ்ரீபாத நாயக்.
இதனிடையே, பாரிக்கரின் உடல்நலம் குறித்து தன்னிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரித்ததாக அக்கட்சியின் கோவா தலைவர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.