துர்கா பூஜை கமிட்டிக்கு ரூ.28 கோடி நிதி வழங்கும் மேற்கு வங்க அரசின் முடிவுக்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்ட 28 ஆயிரம் துர்கா பூஜை கமிட்டிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.28 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த செப்டம்பர் 10ம் தேதி உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்ட நிலையில் அரசின் முடிவில் தலையிட முடியாது எனக்கூறி தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை எதிர் தரப்பினர் தாக்கல் செய்திருந்தனர்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது மேற்கு வங்க அரசுத்தரப்பில் ஆஜரான மூத்த வழக்குறைஞர் கபில் சிபல் கூறுகையில், துர்கா பூஜை கமிட்டிக்கு அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதில்லை.
இத்தொகை மாநில போலீஸார் மூலமாகவே கமிட்டிக்கு வழங்கப்படுகிறது என்பதால் இதற்கு தடையாணை பிறப்பிக்கத் தேவையில்லை என்று வாதிட்டார்.
எதிர்தரப்பில் வழக்குரைஞர் செüரவ் தத்தா தாக்கல் செய்த மனுவில், துர்கா பூஜை கமிட்டிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதன் மூலம் அரசு நிதி ரூ.28 கோடி வீணடிக்கப்பட்டுள்ளதால், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இருதரப்பு மனுவையும் விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோக்குர், தீபக் குப்தா தலைமையிலான அமர்வு, துர்கா பூஜை கமிட்டிக்கு ரூ.28 கோடி நிதி வழங்கும் மேற்கு வங்க அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும், இதுதொடர்பாக விளக்கம் அளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும், 6 வாரங்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கவும், அதுவரையிலும் நிதி வழங்க தடை விதிக்க முடியாது எனவும் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.