தெலுங்கு தேச மாநிலங்களவை உறுப்பினர் சி.எம். ரமேஷ் வீட்டில் வருமானவரித் துறையினர் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதற்கு அக்கட்சி நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்திலுள்ள ரமேஷுக்குச் சொந்தமான வீட்டிலும், தெலங்கானா மாநிலம், ஹைதராபாதிலுள்ள வீட்டிலும் 10-க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், ஹைதராபாதிலுள்ள அவருக்குச் சொந்தமான "ரித்விக் புராஜெக்ட்ஸ்' என்ற நிறுவனத்தின் அலுவலகத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது வழக்கமாக நடைபெறும் சோதனை என்று அவர்கள் தெரிவித்தனர்.
தெலுங்கு தேச நிர்வாகிகள் கண்டனம்: வருமானவரித் துறையினரின் சோதனைக்குக் கண்டனம் தெரிவித்த ரமேஷ், "இது பாஜக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியாகும். நாங்கள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம். இதற்கான கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பிரதமர் மோடி அப்பொழுதே எங்களை மிரட்டினார். தற்போது, அரசியல் பழிவாங்கும் நோக்கில் பாஜக நடந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில், எனது வருமானமான ரூ.200 கோடிக்குத் தகுந்த கணக்கும், அதற்கான வரி செலுத்திய ஆவணங்களும் என்னிடம் இருக்கின்றன' என்று அவர் தெரிவித்தார்.
"தொழிலதிபர்களை பயமுறுத்தி, மாநிலத்துக்குள் முதலீடுகள் வருவதைத் தடுக்க, பாஜக அரசு இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது' என்று மாநில அமைச்சர் என். லோகேஷ் குற்றம் சாட்டினார்.