ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், "ராகுல் காந்தி ஒரு பொய்யர்; பொய்களை திரும்ப திரும்ப கூறுவதால், அவை உண்மையாகிவிடாது' என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
இந்திய விமானப் படைக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸின் "டஸால்ட் ஏவியேஷன்' நிறுவனத்துடன் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.
ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை, ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கும்படி டஸால்ட் நிறுவனத்தை மத்திய அரசு நிர்பந்தித்ததாகவும், இதுதொடர்பாக பிரதமர் மோடி மீது விசாரணை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த டஸால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ததில் எந்த நெருக்கடியும் அளிக்கப்படவில்லை; அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் 10 சதவீத பணிகளுக்கானது மட்டுமே என்று கூறியது. இதனைச் சுட்டி காட்டி, ராகுல் காந்தியை பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ராகுல் காந்தி தொடர்ந்து பொய்களை கூறி வருகிறார். பொய் தகவல்களின் உற்பத்தியாளராக அவர் உள்ளார். தனது பொய்களை நிறுத்திக் கொள்ள வேண்டிய நேரம் அவருக்கு வந்துவிட்டது.
கொள்கையே இல்லாத ஒரு கட்சியும் (காங்கிரஸ்), உண்மையில்லாத அதன் தலைமையும் பிரதமர் மோடிக்கோ, அவரது நிர்வாகத்துக்கோ மாற்றாக அமைய முடியாது என்றார் பியூஷ் கோயல்.