இந்திய கடற்படையின் செயல்திறன்களை அதிகரிக்கும் வகையில், விபத்துக்குள்ளாகி ஆழ்கடலில் சிக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை மீட்பதற்கான மீட்பு கப்பல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கடற்படை செய்தித்தொடர்பாளர் கேப்டன் டி.கே.சர்மா இதுகுறித்து கூறுகையில், "ஆழ்கடலில் மூழ்கும் நீர்மூழ்கி கப்பல்களை தேடுவது, அடையாளம் காணுவது மற்றும் மீட்பது ஆகிய திறனுள்ள நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது'' என்றார்.
தற்போது அமெரிக்கா, சீனா, ரஷியா மற்றும் சில நாடுகளில்தான் இந்த தொழில்நுட்பம் இருக்கிறது.
ஆழ்கடலில் விபத்துக்குள்ளாகும் நீர்மூழ்கிப் கப்பலில் இருந்து பணியாளர்களை மீட்பது மட்டுமல்லாமல், கடலுக்கு அடியில் வயர்களை பதிக்கும் பணிகளுக்கும் இந்த கப்பலை பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது முதல்முறையாக மும்பையில் உள்ள கடற்படையில் அந்த உபகரணம் இணைக்கப்பட்டுள்ளது. மீட்பு கப்பலை விமானத்திலும் கொண்டு செல்ல முடியும் என்ற வகையில், அருகில் தேவைப்படும் கடற்படைத் தளங்களுக்கு அதை எடுத்துச் செல்லலாம்.
இரண்டாவது மீட்பு கப்பல், அடுத்த ஆண்டில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் இணைக்கப்படும்.