சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது உறுதி என்று பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார். மாதாந்திர பூஜைக்காக, வரும் 18-ஆம் தேதி கோயில் திறக்கப்படவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதே சமயம், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கோயிலுக்கு செல்லும் முயற்சியை திருப்தி தேசாய் கைவிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
தேசாய்க்கு எதிர்ப்பு: ஐயப்பன் கோயில் நகைகளை நிர்வகிப்பவர்களான பந்தளம் அரச குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமார வர்மா, திருப்தி தேசாயின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதேபோன்று, கேரள பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, திருப்தி தேசாய்க்கு கண்டனம் தெரிவித்தார்.
மாதாந்திர பூஜைக்காக கோயிலை திறக்கும்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்தவிருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ள சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர், திருப்தி தேசாயின் வருகையை எதிர்த்து காந்திய வழியில் போராடவிருப்பதாகக் கூறியுள்ளார். திருப்தி தேசாய் கோயிலுக்கு வர முயற்சித்தால் சபரிமலையை நோக்கிய சாலைகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் படுத்துக் கொள்வோம் என்றார் அவர்.