தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு (டான்ஜெட்கோ) தினமும் 15 ரயில் வேகன்களில் நிலக்கரி அனுப்பி வைக்கப்படுவதாக கோல் இந்தியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
மின் துறைக்கான தேவையை ஈடு செய்யும் வகையில் 84 சதவீத நிலக்கரியை அத்துறை நிறுவனங்களுக்கு கோல் இந்தியா வழங்கியுள்ளது. அதன்படி நடப்பாண்டு அக்டோபர் 12-ஆம் தேதி நிலவரப்படி மின் துறைக்கு நாள் ஒன்றுக்கு 13.40 லட்சம் டன் நிலக்கரி சப்ளை செய்யப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி மின் தேவை உயர்ந்து வருவதால், மேற்கு வங்கம் மின் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மற்றும் தமிழகத்தில் டான்ஜெட்கோ எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நாள் ஒன்றுக்கு 15 ரயில் வேகன்களில் நிலக்கரி அனுப்பப்படுகிறது.
நடப்பாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் 12 வரையிலான கால அளவில் கோல் இந்தியா நிறுவனம் நாள் ஒன்றுக்கு 12.70 லட்சம் டன் நிலக்கரியை மின் துறைக்கு அனுப்பியுள்ளது. கடந்தாண்டில் இதே கால அளவில் அனுப்பிய 11.6 லட்சம் டன் நிலக்கரியுடன் ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகம் என கோல் இந்தியா தெரிவித்துள்ளது.