ராஜஸ்தானில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51-ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கெனவே 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் கர்ப்பிணிகள். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:
ஜெய்ப்பூரில் சாஸ்திரி நகர் பகுதியில் 3 மாணவர்களுக்கும் ஜிகா வரைஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட அந்தப் பகுதியில் சில கொசுக்களில் ஜிகா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொசுக்களின் மாதிரிகளை பரிசோதனை செய்ததில் இது தெரியவந்தது. கடந்த மாதம் 22-ஆம் தேதி 85 வயது மூதாட்டிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
அப்போதிலிருந்து கொசுக்களை ஒழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிகிச்சைக்குப் பிறகு 30 பேருக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, ஜிகா வைரûஸ மேலும் பரவாமல் தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
சாஸ்திரி நகருக்குள் வர வேண்டாம் என்று கர்ப்பிணிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் 50 முதல் 170 கண்காணிப்புக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜிகா வைரஸ் பாதிப்பு ஆமதாபாதில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் அதே ஜூலை மாதம் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. தீவிர கண்காணிப்புக்கு பிறகு இரு இடங்களிலும் ஜிகா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ராஜஸ்தானில் இந்த வைரஸ் பாதிப்பு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இதை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அந்தத் துறை அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.