புது தில்லி: பெண்களைத் தவறாக சித்தரித்து அதிக அளவில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவதாக கூறி, நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஆப்களுக்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
‘நீதிக்கான உரிமைகள் அறக்கட்டளை’ என்னும் தொண்டு நிறுவனம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
இணையத்தில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் குறிப்பாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட்ஸ்டார் ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஆபாசமாகவும் அப்பட்டமாக பாலியலை வெளிப்படுத்தும் விதமாக உள்ளன. நெறிமுறை அற்ற வகையில் உள்ள பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பெண்கள் தவறான முறையில் சித்தரிக்கப்படுகின்றனர்.
எனவே இணையத்தில் வெளியாகும் நிகழ்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கபட வேண்டும். இதை செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் நீதித்துறை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் சட்டப்படி தடை செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை மற்றும் அதுதொடர்பான உள்ளடக்கங்கள் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது
இந்த மனு நவம்பர் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.