மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், பாஜகவில் சேர்வதற்கு முன் பல்வேறு இதழ்களில் ஆசிரியராகப் பொறுப்பு வகித்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில் தங்களுக்கு எம்.ஜே.அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்று சில பெண் பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாலியல் தொந்தரவுக்குள்ளான பெண்கள், தங்களுக்கு நேரிட்ட பாதிப்பை வெளிப்படுத்தும் மீ டூ பிரசாரத்தின் மூலம், எம்.ஜே.அக்பர் மீதான குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இதனிடையே, தன் மீது போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அமைச்சர் அக்பர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தன்மீது வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்று அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக பத்திரிகையாளருக்கு எதிராக எம்.ஜே.அக்பர் தொடுத்த அவதூறு வழக்கு தில்லி நீதிமன்றத்தில் அக்டோபர் 18-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. மேலும் தில்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தேவாலுடன் அமைச்சர் எம்.ஜே.அக்பர் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.