ஜம்மு-காஷ்மீரில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதன்மூலம், 4 கட்டமாக நடந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்கு வந்தது.
இறுதிக்கட்ட தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் மிகவும் குறைந்தபட்சமாக 4.3 சதவீத வாக்குகள் பதிவானது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்ரீநகர், கந்தர்பால் ஆகிய மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 308 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
ஸ்ரீநகர் மாநகராட்சியில் 24 வார்டுகளில் உள்ள 2.42 லட்சம் வாக்காளர்களில் 4 சதவீதம் மட்டுமே அதாவது, 9,678 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
கந்தர்பாலில் 8,908 வாக்களார்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 6 மாவட்டங்களில் உள்ள 8 நகராட்சி அமைப்புகளில் 2 அமைப்புகளுக்கு மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சியுள்ள 6 நகராட்சி அமைப்புகளின் சிலவற்றில் எவரும் போட்டியிடவில்லை, சில இடங்களில் போட்டியின்றி சிலர் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் 36 வார்டுகளில் 151 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.