சபரிமலை வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை மாலை 5 மணியளவில் முதல்முறையாக திறக்கப்பட்டது.
இதனிடையே, சபரிமலைக்கு பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் கூடிய ஐயப்ப பக்தர்கள் அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சபரிமலையில் பெண் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. மேலும் சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேசிய மகளிர் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கேரள டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது.
ஐயப்ப பக்தர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது கேரள போலீஸார் தடியடி நடத்தி வருகின்றனர். இதனால், பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பத்தனம்திட்டா, நிலக்கல், பம்பை உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.