நிலக்கல்: சபரிமலையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காகத் புதனன்று திறக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு பிறகு 22-ம் தேதி நடை அடைக்கப்படுகிறது.
சபரிமலைக்குப் பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில் வரும் வாகனங்களை உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் சோதனையிட்டு, 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சபரிமலை, நிலக்கல் மற்றும் பம்பையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 1500-க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பம்பை அடிவார முகாம் பகுதியில் பெண் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் வாகனங்கள் மீது போராட்டக்காரராகள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு உண்டானது.
நிலக்கல் பகுதியில் 'ரிபப்ளிக்' ஆங்கிலத் தொலைக்காட்சியினைச் சேர்ந்த பத்திரிகையாளர் சரிதா போராட்டம் பற்றிய செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூஜா வந்திருந்த வாகனத்தை போராட்டக்காரர்கள் சூழ்ந்து கொண்டு அடித்து நொறுக்கினர். அதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அவருடன் வந்திருந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவுக் குழுவினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதேபோல் பேருந்து ஒன்றில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த 'நியூஸ் மினிட்' ஆங்கில செய்தி இணையதளத்தைச் சேர்ந்த சரிதா என்ற மற்றொரு பத்திரிகையாளர் பேருந்திலிருந்து கீழே இறக்கப்பட்டு தாக்கப்பட்டார்.
போலீசார் விரைந்து வந்து அவர்கள் இருவரையும் மீட்டனர். அவர்களிடம் பின்னர் விசாரணை நடைபெற்றது. இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு பலத்த பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில் சபரிமலையில் மூன்றாவதாக மீண்டும் ஒரு பெண் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா டுடே தொலைக்காட்சியைச் சேர்ந்த மௌஷாமி சிங் என்ற பெண் பத்திரிக்கையாளர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த மூன்று தாக்குதல்சம்பவங்களின் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.