புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவரும் திவாரி. உத்தரபிரதேசம், உத்ரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதல்வரான என்.டி.திவாரி (92) உடல்நலக் குறைவால் வியாழனன்று காலமானார்.
2007 முதல் 2009 வரை ஆந்திர மாநில ஆளுநராகவும் பதவி வகித்த என்.டி.திவாரி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்காக அவர் தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வருடம் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து காணப்பட்டது. இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலமானார்.
இந்நிலையில் என்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
என்.டி திவாரி மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். உயரிய தலைவரான என்.டி திவாரி, தனது நிர்வாகத்திறனால் அறியப்பட்டவர். தொழிற்துறை வளர்ச்சி மற்றும் உத்தரகாண்ட், உத்தர பிரதேச மாநிலங்களின் வளர்ச்சிக்காக ஆற்றிய பணிகளால் என்.டி திவாரி நினைவு கூறப்படுவார். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.