அமிர்தசரஸ் ரயில் விபத்துக்கு காங்கிரஸ் காரணமா என்று எழுந்த கேள்விக்கு பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் தசரா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற ரயில் விபத்தில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஏராளமானோர் இருந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,
"இந்த தசரா கொண்டாட்டத்தை காங்கிரஸ் கட்சி அனுமதி பெறாமல் நடத்தியிருக்கிறது. இந்த கொண்டாட்டத்துக்கு நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி தான் சிறப்பு விருந்தினர். மக்கள் மீது ரயில் மோதிய பிறகும் அவர் உரையாற்றி கொண்டிருந்தார்" என்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கௌர் சித்து கூறுகையில்,
"ராவணின் கொடும்பாவி எரிக்கப்பட்டது. சம்பவம் நடைபெறுவதற்கு சற்று முன்பு நான் அங்கிருந்து கிளம்பிவிட்டேன். காயமடைந்தவர்களுக்கு தான் தற்போது முன்னுரிமை வழங்கப்படவேண்டும். தசரா கொண்டாட்டம் அங்கு ஆண்டுதோறும் நடைபெறும். இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் வெட்கப்படவேண்டும்" என்றார்.