ஒருவர் எந்த வகையில் பக்தராக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் சொல்லுங்கள், பிறகு நான் பக்தரா இல்லையா என்று சொல்கிறேன் என்று பெண்ணிய ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமா தெரிவித்தார்.
தெலங்கானாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா மற்றும் பெண்ணிய ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமா வெள்ளிக்கிழமை காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை கோயிலுக்குச் சென்றனர். இருவரும் சன்னிதானத்தின் கீழ்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் இவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் முன் பக்தர்கள் முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும் சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்க பக்கதர்கள் மறுத்துவிட்டனர். நிலைமையை உணர்ந்த கேரள அரசு, சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து இரண்டு பெண்களும் சபரிமலை நடைப்பந்தலில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பம்பை திரும்பினர்.
இதற்கிடையே, கொச்சியில் உள்ள பெண்ணிய ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமா இல்லத்தில் தாக்குதல் நடைபெற்றதாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெண்ணிய ஆர்வலர் ரெஹானா ஃபாத்திமா,
"பக்தர்கள் அல்லாது அமைதியை சீர்குலைக்க நினைக்கும் சிலரே எங்களை கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எனக்கு அதற்கான காரணம் தெரியவேண்டும். எந்த வகையில் ஒருவர் பக்தராக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். முதலில் நீங்கள் அதை சொல்லுங்கள், பிறகு நான் பக்தரா இல்லையா என்று சொல்கிறேன்.
எனது குழந்தைகளுக்கு என்ன ஆயிற்று என்று எனக்கு தெரியாது. எனது உயிரும் ஆபத்தில் உள்ளது. ஆனால், போலீஸார் பாதுகாப்பு அளிப்பதாக தெரிவித்தனர். அதனால் நான் திரும்ப செல்கிறேன்" என்றார்.