பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கள் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற போலீஸாரின் கோரிக்கையை ஏற்று பத்தினம்திட்டா ஆட்சியர் தடை உத்தரவை நீட்டித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கோயிலுக்குள் நுழைய பெண்கள் முற்பட்டனர். ஆனால், பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை வரை தடை உத்தரவை நீட்டித்து பத்தினம்திட்டா ஆட்சியர் நூஹ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை தெலங்கானாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் மற்றும் கொச்சியைச் சேர்ந்த பெண்ணிய ஆர்வலரும் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றனர். ஆனால், போராட்டம் காரணமாக சன்னிதானத்துக்கு 500 மீ. முன் அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் பம்பை அழைத்து வர வேண்டும் என்று அனுமதி மறுக்கப்பட்டு கேரள அரசு உத்தரவிட்டது. இதனால், சபரிமலை பகுதியில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து, பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கள் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பத்தினம்திட்டா ஆட்சியரிடம் போலீஸார் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக்கொண்ட பத்தினம்திட்டா ஆட்சியர் அந்தப் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.