சபரிமலைக்கு வந்த மேலும் ஒரு பெண்ணும் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, கோயில் நடை மாதாந்திர பூஜைக்காக புதன்கிழமை முதல்முறையாக திறக்கப்பட்டது.
தீர்ப்பை சுட்டிக்காட்டி சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பக்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். இந்நிலையில் இன்று காலை பெண் பத்திரிகையாளர் கவிதா உள்ளிட்ட இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சன்னிதானம் வந்தனர்.
இருவரும் சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை நெருங்கியதும் பக்தர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்களை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.
இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள், சிறிது நேரத்திலேயே மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் சுவாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலை நோக்கி புறப்பட்டார். ஆனால் அவரை பம்பையிலேயே தடுத்து நிறுத்திய பக்தர்கள், திருப்பி அனுப்பினர்.