சபரிமலை ஐயப்பன் கோயில் செல்ல முயன்ற பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல் மற்றும் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோரை சன்னிதானம் கீழ்பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதுவரை எந்த பெண்களும் சபரிமலை கோயில் உள்ளே செல்லவில்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் கூறியிருந்த நிலையில், பம்பையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவர்கள் இருவரும் சபரிமலை பயணம் மேற்கொண்டனர்.
பம்பையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்ட ஐதராபாத்தில் செயல்படும் மோஜோ தொலைக்காட்சியைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவிதா ஜக்கல் மற்றும் பெண்ணியவாதி ரஹானா பாத்திமா ஆகியோர் சபரிமலைக்கு வெள்ளிக்கிழமை பயணம் மேற்கொண்டனர். மேலும் இவர்கள் இருவரும் இருமுடி கட்டியபடி இப்பயணத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து சபரிமலை சன்னிதானத்தின் கீழ்ப்பகுதியான நடைப்பந்தலை அடைந்த போது அவர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சன்னிதானம் அருகே ஐயப்ப பக்தர்கள் முழக்கமிட்டனர். எனவே போராட்டத்தை நடத்தி வரும் ஐயப்ப பக்தர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இந்நிலையில், பெண் பக்தர்கள் அல்லாமல் பத்திரிகையாளர் மற்றும் பெண்ணியவாதிகளை சபரிமலை கோயிலுக்குள் அனுப்ப இயலாது. சபரிமலைக் கோயில் என்பது போராட்டக்களமல்ல என கேரள அரசின் தோவசம் போர்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களை அங்கிருந்து திருப்பி அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.