சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்கும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கேரளம், தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர்மறையான தகவல்களை கண்காணிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ஹிந்து அமைப்பினர், ஐயப்ப பக்தர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கேரளம் மட்டுமன்றி தமிழகத்திலும் கர்நாடகத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தொடர் போராட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும், அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதேபோல், உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் எதிர்மறையான தகவல்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.