தகவல் - தொழில்நுட்பம் மற்றும் மின்னணு தொழில்நுட்பம் வாயிலாக புதிய தேசத்தை கட்டமைப்பதற்கான ஆலோசனைகளையும், கருத்துகளை வழங்குமாறு துறைசார் நிபுணர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் செயலியில் அக்கருத்துகளை பதிவிடுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பிரதமர் மோடி வரும் 24-ஆம் தேதி கலந்துரையாடவுள்ளார். நவநாகரிக தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாட்டை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக அவர் அப்போது விவாதிக்க உள்ளார்.
இதுதொடர்பாக நரேந்திர மோடி செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தகவல் - தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் வல்லுநர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் நடைபெறுகிறது. அந்தத் துறைகள் சார்ந்த உற்பத்தியைப் பெருக்கி எந்தெந்த வகைகளில் நாட்டை மேம்படுத்தலாம் என்பது தொடர்பாக அவர்களிடையே அவர் விரிவாக ஆலோசிக்க உள்ளார் என்று அந்தச் செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சுட்டுரையில் இதுகுறித்து பதிவிட்டிருந்த பிரதமர், அன்பிற்கினிய தொழில்நுட்ப நிபுணர்களே, புதிய தேசத்தை வடிவமைப்பதற்குத் தேவையான கருத்துகளையும், ஆலோசனைகளையும் உங்களிடம் இருந்து பெற விழைகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.