மைசூரு அரச குடும்பத்தின் மகாராணி பிரமோதா தேவியின் தாய் புட்டசின்னமணி (98) , மறைந்த ஸ்ரீகண்டதத்த உடையாரின் சகோதரி விஷாலாக்ஷிதேவி (58) ஆகிய இருவரும் உடல் நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (அக்.19) உயிரிழந்தனர்.
தசரா விழாவில் அரச குடும்பத்தில் திடீரென இருவர் உயிரிழந்ததால் அரண்மனையில் நடைபெறும் சம்பிரதாய நிகழ்வுகள் அனைத்தும் அக்.22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. தசரா விழாவின் இறுதி நாளான விஜயதசமியன்று அரண்மையிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். ஆனால், புட்டசின்னமணி, விஷாலாக்ஷிதேவி காலமானதையடுத்து, அரண்மனை நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
புட்டசின்னமணியின் உடலுக்கு அமைச்சர் சா.ரா.மகேஷ் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் குமாரசாமி, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். புட்டசின்னமணியின் இறுதிச் சடங்கு சம்மர் பேலஸில் நடைபெற உள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன. விஜயதசமியன்று நடைபெறும் தசரா விழாவில் அரச குடும்பத்தினர் பங்கேற்காதது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.