புதுதில்லி: சபரிமலை தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு ஆய்வு மனுக்களை எப்போது விசாரிப்பது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று முடிவெடுக்க உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. கோயிலில் 50 வயதுக்கு உள்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையும் மீறி வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை, பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை போலீஸார் பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.
அதேசமயம் சபரிமலை விவகாரம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தேவசம் போர்டு, கேரள நாயர்கள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக ஏறக்குறைய 19 மறு ஆய்வு மற்றும் சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சபரிமலை தீர்ப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு மனுக்களை எப்போது விசாரிப்பது என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம் மலையாள மாதமான துலாம் திறப்பை ஓட்டி திறக்கப்பட்ட சபரிமலை அய்யப்பன் கோவில் நடையானது, திங்கள் மாலை அடைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.