புது தில்லி: லஞ்சப் புகார் சர்ச்சை தொடர்பாக சிபிஐயின் இயக்குநர்கள் இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு மோடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
சதிஷ் சனா என்கின்ற தொழிலதிபர், சிபிஐ-க்கு, அஸ்தானா தன்னிடம் லஞ்சம் வாங்கியதாக தெரிவித்த புகாரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. சிபிஐ வழக்கு ஒன்றில் சனா சிக்கியிருப்பதால் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 கோடி ரூபாய் லஞ்சம் வேண்டும் என அஸ்தானா, இடைத்தரகர் மனோஜ் பிரசாத் என்பவர் மூலம் கேட்டதாக புகாரில் சொல்லப்பட்டுள்ளது.
அதே சமயம் 2 மாதங்களுக்கு முன்னர் சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, தொழிலதிபர் சனாவிடமிருந்து 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றார் எனவும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரவை செயலரிடம் அஸ்தானா. புகார் தெரிவித்தார்
ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நீதிபதி முன்னர் நேரில் ஆஜராகிய சனா, டிசம்பர் 2017 முதல் அக்டோபர் 2018 வரை, அஸ்தானாவுடன் தொடர்பு வைத்திருக்கும் இடைத்தரகரிடம் லஞ்சப் பணம் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இடைத்தரகரான மனோஜ் பிரசாத் கடந்த 16 ஆம் தேதி துபாயிலிருந்து விமானம் மூலம் வந்த போது கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, சிறப்பு இயக்குநரான அஸ்தானா மீது தனக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில் பண மோசடி மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்கில் சிக்கி உள்ள தொழிலதிபர் மொயின் குரேஷி என்பவரது வழக்கு தொடர்பாக ராகேஷ் அஸ்தானா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
சனா வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் மனோஜ் குமார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அஸ்தானாவுக்கு மொயின் குரேஷி விவகாரத்தில் ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அளித்த வாக்குமூலத்தின் மூலமே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மனோஜ் பிரசாத் கைதுக்குப் பிறகு, அஸ்தானா போன் அழைப்புகளை சிபிஐ ஆராய்ந்துள்ளதாக கூறுகிறது. அப்போது மனோஜின் கைது குறித்து இந்திய உளவுப் பிரிவான 'ரா' அமைப்பின் சமந்குமார் கோயலிடம் அஸ்தானா பேசியிருப்பது தெரிய வந்துள்ளது
நாட்டின் முன்னணி விசாரணை முகமையான சிபியின் இயக்குநர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டிக்கொள்வது, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது எல்லாமே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லஞ்சப் புகார் சர்ச்சை தொடர்பாக சிபிஐயின் இயக்குநர் அலோக் வெர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரையும் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது