ஆணின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

ஆண்களுக்கான திருமண வயதை 21-இல் இருந்து 18-ஆகக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும்,
ஆணின் திருமண வயதை 18-ஆக குறைக்க கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி


ஆண்களுக்கான திருமண வயதை 21-இல் இருந்து 18-ஆகக் குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது. மேலும், மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞருக்கு ரூ.25,000 அபராதமும் விதித்தது.
முன்னதாக, வழக்குரைஞர் அசோக் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
18 வயதை நிறைவு செய்யும் ஒரு ஆணும், பெண்ணும் தங்களுக்கான எம்எல்ஏ, எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை பெறுவதால், அந்த வயதினர் சிறார் என்ற பருவத்தை கடந்துவிட்டதாகவே கொள்ளலாம். 
ஆனாலும், ஒரு ஆணால் அந்த வயதில் திருமணம் செய்துகொள்ள இயலவில்லை. 
ஒரு ஆண்/பெண் திருமணம் செய்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயதை, குழந்தைத் திருமண தடைச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், ஹிந்து திருமணச் சட்டம் ஆகியவற்றின் விதிகள் வரையறுக்கின்றன.
இந்த விதிகள், இந்திய அரசியலமைப்பு வழங்கும் பல்வேறு அடிப்படை உரிமைகளை மறுப்பவையாக உள்ளன. மேற்குறிப்பிட்ட 3 சட்டங்களின் விதிகளுமே, ஒரு ஆண் மற்றும் பெண்ணுக்கான திருமண வயதை நிர்ணயிப்பதில் வித்தியாசம் கொண்டுள்ளன. எனவே, அந்தச் சட்ட விதிகளின் செல்லுபடியாகும் தன்மைக்கு எதிராக முறையிடலாம்.
மேற்குறிப்பிட்ட சட்ட விதிகள் தேவையற்றதாக இருப்பதுடன், மத, இன, சாதி, பாலின அடிப்படையிலான பாகுபாடுகளை தடைசெய்யும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 15-ஐ மீறியதாகவும் உள்ளது என்று அந்த மனுவில் அசோக் பாண்டே கூறியிருந்தார்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே. கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவில் பொதுநலன் இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால், மனுவை விசாரணைக்கு ஏற்க இயலாது. எனவே, சம்பந்தப்பட்ட மனு, ரூ.25,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டது.
இதையடுத்து, அபராதத் தொகையை தள்ளுபடி செய்யக் கோரி மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதிகள், 18 வயது நிறைவடந்த ஒரு நபர் இதேபோன்ற ஒரு மனுவுடன் நீதிமன்றத்தை நாடும்போது, உங்களிடம் (அசோக் பாண்டே) பெறப்பட்ட இந்த அபராதத் தொகை அவருக்கு வழங்கப்படும். 
திருமண வயது விவகாரத்தில் பாதிக்கப்பட்ட எவரும் நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com