இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை சுமார் 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்த வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு அதிகமாக வருமானம் பெறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில், சுமார் 60 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 2014-15 ஆம் ஆண்டு, 88,649 நிறுவனங்களும், தனிநபர்களும் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு அதிகமாக வருமானம் உள்ளதாகக் கணக்கு காண்பித்து, அதற்குரிய வரிகளைச் செலுத்தியிருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 2017-18 ஆம் ஆண்டில், 1,40,139-ஆக அதிகரித்து உள்ளது.
அதே வேளையில், கடந்த 2014-15 ஆம் ஆண்டில், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்ற தனிநபர்களின் எண்ணிக்கை 48,416-ஆக இருந்தது. இது கடந்த 2017-18 ஆம் ஆண்டில், 81,344-ஆக உயர்ந்துள்ளது.
கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை: இது குறித்து கருத்து தெரிவித்த வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, நாட்டின் மொத்த வருவாயில், நேரடி வரிகளின் பங்கு 52 சதவீதமாக உள்ளது.
வரி செலுத்துவதை மேலும் எளிமையாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரி ஏய்ப்பில் ஈடுபடுவோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், சட்டவிரோத நிதிப் பறிமாற்றம் செய்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்து வைத்துள்ளவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரித்து, கடுமையான தண்டனைகளை அளிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.