சபரிமலைக்குச் செல்ல முயற்சி: மேலும் ஒரு பெண் தடுத்து நிறுத்தம்

சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற மேலும் ஒரு பெண், ஐயப்ப பக்தர்களால் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டார்.


சபரிமலை கோயிலுக்குச் செல்ல முயன்ற மேலும் ஒரு பெண், ஐயப்ப பக்தர்களால் திங்கள்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டார்.
சபரிமலை கோயிலுக்குச் செல்வதற்காக, பிந்து என்ற தலித் சமூக ஆர்வலர், போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்தில் பம்பைக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டுச் சென்றார். பம்பை அருகே சென்று கொண்டிருந்தபோது, அவர் வருவதை அறிந்த பாஜக தொண்டர்கள், பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு பேருந்தில் இருந்து இறங்கி அவர் திரும்பிச் சென்றார். அவரை போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயற்சி செய்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகளும், ஐயப்ப பக்தர்களும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தச் சூழலில், ஐயப்பன் கோயிலின் நடை கடந்த புதன்கிழமை திறக்கப்பட்டது. தீர்ப்பை ஆதரித்து, கோயிலுக்கு வந்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர் என சில பெண்களை பக்தர்கள் பாதி வழியில் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, சபரிமலை கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோயிலுக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக, கோயில் பகுதியில் பக்தர்கள் முகாமிட்டுள்ளனர்.
5 நாள் பூஜைக்குப் பிறகு கோயிலின் நடை திங்கள்கிழமை இரவு மூடப்பட்டது. அதன் பிறகு, மகர விளக்கு பூஜைக்காக கோயில் மீண்டும் அடுத்த மாதம் திறக்கப்படும். இதனடையே, கடைசி நாளான திங்கள்கிழமை, ஏராளமான பெண்கள் கோயிலுக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com