பிரதமர் மோடியின் செல்வாக்கை கண்டு அஞ்சியே, தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தலை முன்கூட்டியே சந்திக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்ததாக, மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
தெலங்கானா சட்டப் பேரவையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். இதையடுத்து, அவரது பரிந்துரையின்படி அந்த மாநில சட்டப் பேரவை அண்மையில் கலைக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநில பாஜக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா, மஹபூப்நகர் மாவட்டம், மக்தால் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசியதாவது:
தெலங்கானா சட்டப் பேரவைக்கு, அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அவ்வாறு நடைபெற்றால், அது மோடியின் தேர்தலாகவே அமையும். அதில் டிஆர்எஸ் வெற்றி பெறாது.
எனவேதான், முன்கூட்டியே தேர்தலை சந்திக்க சந்திரசேகர் ராவ் முடிவு செய்தார். அஸாத்துதீன் ஒவைஸியின் எம்ஐஎம் - டிஆர்எஸ் கட்சிகள் இடையிலான உடன்பாடு புனிதமற்றது. அதனை மக்கள் நிராகரிப்பர். தெலங்கானா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் சந்திரசேகர் ராவ் நிறைவேற்றவில்லை. ஏழைகளுக்கு இலவச காப்பீடு அளிக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணையாமல் அவரது அரசு புறக்கணித்துவிட்டது என்றார் ஜே.பி. நட்டா.