புது தில்லி: ரஃபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று சிபிஐ விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார்.
சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தனது விசாரணை நடவடிக்கைகளில் அலோக் வர்மா தலையிடுவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் அண்மையில் அஸ்தானா புகாரளித்திருந்தார். அதேசமயம் வழக்கு ஒன்றில் தொழிலதிபரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
நிலைமை மோசமாக ஆவதை உணர்ந்த மத்திய அரசு செவ்வாய் நள்ளிரவு எடுத்த முடிவின் படி அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது
இந்நிலையில் ரஃபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று சிபிஐ விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
சிபிஐ இயக்குநரான அலோக் வர்மா ரஃபேல் ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கத் துவங்கியிருந்தார். அவர் தற்போது வலுக்கட்டாயமாக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். பிரதமரின் செய்தியை மிகவும் தெளிவானது. ரஃபேல் ஊழல் தொடர்பாக யார் விசாரிக்க முயன்றாலும் அவர்கள் நீக்கப்படுவார்கள்; துடைத்தெறியப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.