ஸ்ரீநகர்: தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாத குழுக்களில் இணைந்து செயல்படும் உள்ளூர் இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது அதகரித்திருக்கிறது. இதன்காரணமாக உள்ளூர் மக்கள் படைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதும் அதிகரித்திருக்கிறது.
இதனால் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அதிகாரிகள் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதி மறுத்து வந்தனர். வழக்கமான தொழுகைக்கு பின்னர் கூடும் இளைஞர்கள் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்ற அச்சத்தில் இந்தத் தடை விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஸ்ரீநகர் ஜமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு எழுந்துள்ளது.
மூத்த பிரிவினைவாதத் தலைவரான மிர்வாய்ஸ் உமர் பாரூக் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.