ஊழல் வழக்கு: சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு 14 நாள் போலீஸ் காவல் 

ஊழல் வழக்கு கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவைத்துள்ளது.   
ஊழல் வழக்கு: சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு 14 நாள் போலீஸ் காவல் 

புது தில்லி: ஊழல் வழக்கு கைது செய்யப்பட்டுள்ள சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாருக்கு 14 நாள் போலீஸ் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவைத்துள்ளது.  

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த விவகாரத்தில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமையிலான சிபிஐ சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்தியது. இந்த குழுவில் சிபிஐ துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமார் இடம்பெற்றிருந்தார். மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதனிடையே, மொயின் குரேஷியின் சட்ட விரோத செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த இடைத் தரகர் மனோஜ் பிரசாத் என்பவரை சிபிஐ கைது செய்து விசாரித்தது. அப்போது அவர், மொயின் குரேஷி தொடர்பான வழக்கில் இருந்து சதீஷ் சனாவை விடுவிப்பதற்கு அஸ்தானாவுக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனடிப்படையில், சனாவை வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா, தேவேந்தர் குமார் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. முன்னதாக, சனாவை வழக்கில் இருந்து விடுவிப்பதற்கு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியிருப்பதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையரிடம் அஸ்தானா கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்திருந்தார். தற்போது அதே லஞ்ச குற்றச்சாட்டின்கீழ் அஸ்தானா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் துணை கண்காணிப்பாளர் தேவேந்தர் குமாரை சிபிஐ 22-ஆம் தேதியன்று அதிரடியாக கைது செய்துள்ளது. 

இதனையடுத்து லஞ்சம் பெற்றதாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தில்லி உயர் நீதிமன்றத்தில் மறுநாள் 23-ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தடை விதிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

அந்த மனுவானது விசாரணைக்கு வந்த பொழுது அஸ்தானாவின் மனுவினை ஏற்க இயலாது; சிபிஐ விசாரணை தொடர்ந்து நடைபெறலாம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

விசாரணை அறிக்கையை வரும் திங்களன்று (29.10.18) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றமானது, அதுவரை இந்த வழக்கில் அஸ்தானாவைக் கைது செய்ய தடை விதித்துள்ளது.   

இந்நிலையில் சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவை கைது செய்ய நவமபர் 1 வரை தடையை நீட்டித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கானது திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ கூடுதல் அவகாசம் கேட்டதால், நவமபர் 1-ஆம் தேதி வரை நேரமளித்த நீதிமன்றம், அதுவரை அஸ்தானாவை கைது செய்வதற்கான தடையையும் நீட்டித்து உத்தரவிட்டது   

இந்நிலையில், கைதான துணைக்கண்காணிப்பாளர் தேவேந்திர குமாரின்  விசாரணை காவல் இன்றுடன் முடிவடைந்ததை தொடர்ந்து தேவேந்திர குமார் மற்றும் இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டனர். .

அவர்கள் இருவரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com