புது தில்லி: துணை ஜனாதிபதியாக தனது ஓராண்டு அனுபவங்கள் குறித்து வெங்கய்ய நாயுடு எழுதியுள்ள நூலை பிரதமர் மோடி வெளியிட்டார்
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கய்ய நாயுடு. இவர் துணை ஜனாதிபதியாக 2017 ம் ஆண்டு, ஆகஸ்ட் 11ம் தேதி அன்று பதவியேற்றார். அத்துடன் மாநிலங்களவை சபாநாயகராகவும் பதவியேற்றிருந்தார். அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த ஓராண்டில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு அவர் “Moving on…Moving forward: A year in office” என்று பெயரிட்டுள்ளார்.
245 பக்கங்களைக் கொண்டுள்ள இந்த புத்தகத்தில், 'புதிய இந்தியா' உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், வெங்கய்ய நாயுடுவின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் முக்கிய விவகாரங்களில் அவரது பங்களிப்பு இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெங்கய்ய நாயுடு எழுதியுள்ள நூலை தில்லியில் பிரதமர் மோடி ஞாயிறன்று வெளியிட்டார்
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர்கள் தேவே கவுடா, மன்மோகன் சிங், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, ஆனந்த் குமார் மற்றும் ராஜ்ய சபா எதிர்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்றனர்.