புது தில்லி: தற்போதுள்ள நாடாளுமன்றத்தில் 94 எம்.பிக்கள் இன்னும் தங்களது சொத்துக் கணக்கினை தாக்கல் செய்யவில்லை என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, எம்.பி.க்கள் அனைவரும் தாங்கள் பதவியேற்ற 90 நாட்களுக்குள் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாகும்.
இந்நிலையில் சமூக ஆர்வலரான ரச்சனா கல்ரா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசு விதிமுறைகளின் படி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் எத்தனை பேர் இன்னும் தங்கள் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யாமல் இருக்கிறார்கள் என்று கேட்டிருந்தார்.
அவரது கேள்விக்கு, நாடாளுமன்ற மக்களவைச் செயலாளர் அளித்துள்ள பதில்பின்வருமாறு:
மக்களவையில் உள்ள மொத்த எம்.பி.க்களில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து இன்னும் 61 எம்.பி.க்கள் இன்னும் தங்களின் சொத்துக்கணக்கை தாக்கல் செய்யவில்லை, இதில் 4 எம்.பி.க்கள் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
அதேபோல மாநிலங்களவையில் 29 எம்.பி.க்கள் இன்னும் கணக்கு தாக்கல் செய்யவில்லை. இதில் தலா 6 எம்.பி.க்கள் , பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஏஐடிசி, டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த தலா 3 எம்.பி.க்கள், பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 2 எம்.பி.க்கள் ஆகியோர் சொத்துக்கணக்கு தாக்கல் செய்யவில்லை.
இவ்வாறு மக்களவைச் செயலாளர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.