கோரக்பூர்: ஆட்டோ பயணக்கட்டணத்தை விட விமானப் பயணக்கட்டணம் குறைவுதான் என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா விளக்கமளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள புதிய உள்நாட்டு விமான முனையத்தின் திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
தற்போது விமானப் பயணக்கட்டணம் என்பது ஆட்டோ பயணக்கட்டணத்தை விட குறைவுதான். எப்படி இது சாத்தியம் என்று நீங்கள் என்னைக் கேட்கலாம். இருவர் ஒரு ஆட்டோ ரிக்சாவில் பயணம் செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அவர்களுக்கு ரூ 10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதாவது கிலோ மீட்டருக்கு ஒருவருக்கு ரூ 5 என்ற அளவில் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால் நீங்கள் விமானப் பயணம் மேற்கொண்டால் கிலோமீட்டருக்கு உங்களிடம் ரூ 4 மட்டுமே தற்போது கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
அவரது இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.