கோண்டா (உ.பி): உத்தரபிரதேச பல்கலைக்கழகம் ஒன்று தேர்வு எழுத உள்ள மாணவருக்கு அமிதாப் பச்சன் படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கிய பரிதாபம் நிகழ்ந்துள்ளது.
உத்தரபிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தில் டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோண்டா மாவட்டத்தில், ரவீந்திர சிங் ஸ்மரக் மஹாவித்யாலயா என்னும் கல்லூரி இயங்குகிறது. இந்த கல்லூரியில் அமித் திவிவேதி என்னும் மாணவர் பி.எட் படிப்பினைப் பயின்று வருகிறார்.
பல்கலைக்கழத் தேர்வு எழுதுவதற்காக அமித் விண்ணப்[பித்திருந்தார்.அவருக்குத்தான் தற்பொழுது அமிதாப் பச்சன் படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு பல்கலைக்கழகத்தினால் வழங்கபட்டுள்ளது.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஓன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
நான் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வினை எழுதுவதற்காக முறைப்படி எனது படத்தினை ஒட்டித்தான் விண்ணப்ப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு அமிதாப் பச்சன் படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு பல்கலைக்கழகத்தினால் வழங்கபட்டது. பின்னர் நான் உரிய கூடுதல் ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டேன். ஆனால் தற்பொழுது எனது மதிப்பெண் பட்டியலும் அமிதாப் பச்சன் படத்துடன் வருமோ என அச்சப்படுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதேசமயம் ஸ்மரக் மஹாவித்யாலயா கல்லூரியின் சார்பில் பேசிய நிர்வாக அதிகாரி குர்பேந்திர மிஸ்ரா, 'மாணவர் அவராகவோ அல்லது அவர் விண்ணப்பித்த இடமான இணைய தள மையமோ இந்த தவறைச் செய்திருக்கலாம். அல்லது ஒருவேளை பல்கலைக்கழக தரப்பில் கூட தவறு நிகழ்ந்திருக்கலாம். தற்பொழுது சரியான மதிப்பெண் பட்டியலைப் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்று தெரிவித்தார்.