பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கையை 1 வாரத்துக்குள் மாநிலங்கள் சமர்பிக்காவிட்டால் உள்துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்தியாவில் பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் அதிகரித்து வந்த நிலையில், இதை தடுப்பதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், இதனை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றத்துக்கும் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.
இந்நிலையில், ராஜஸ்தானில் கடந்த ஜூலை மாதம் 21-ஆம் தேதி பசுக்களை கடத்திச் செல்வதாக சந்தேகிக்கப்பட்டு ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இதையடுத்து, ராஜஸ்தான் மாநில அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிகையாளர் துஷார் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் தெசீன் பூனாவலா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை தொடர்பான விசாரணையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.
அதில், " பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக 29 மாநிலங்களில் இதுவரை 11 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் மட்டுமே அறிக்கை சமர்பித்துள்ளனர்.
அதனால், அறிக்கையை சமர்பிக்காத மாநிலங்கள் ஒரு வாரத்துக்குள் அறிக்கையை சமர்பிக்க வேண்டும். இல்லையெனில் மாநிலங்களின் உள்துறை செயலாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நேரிடும்" என்றனர்.
பசு பாதுகாப்பு மற்றும் கும்பல் கொலைகள் தொடர்பாக சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரை செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.