திருமலை திருப்பதி தேவஸ்தானம் அடுத்த ஆண்டுக்காக (2019) வெளியிட உள்ள நாள்காட்டி மற்றும் கையேடுகளை (டைரி) பெற பக்தர்கள் வரும் 14ஆம் தேதி முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருமலை அன்னமய்ய பவனில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் பதிலளித்தார். அதன் பின் அவர் கூறியதாவது:
வரும் 13ஆம் தேதி திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது. அன்று மாலை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2019ஆம் ஆண்டிற்கான தேவஸ்தான நாள்காட்டி மற்றும் கையேடுகளை வெளியிட உள்ளார். நாள்காட்டி மற்றும் கையேடுகளைப் பெற வரும் 14ஆம் தேதி முதல் தேவஸ்தான இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பக்தர்கள் இடைத் தரகர்களை நம்ப வேண்டாம். பக்தர்கள் ஏமாறாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது. தேவஸ்தானத்தின் அன்னதான அறக்கட்டளைக்கு பக்தர்கள் அளித்த நன்கொடை கடந்த 6ம் தேதி ரூ.1,000 கோடியை எட்டியது.
கந்ட 1952ஆம் ஆண்டு முதல் திருவாபரணப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆபரணங்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.
அன்று முதல் ஆந்திர அரசால் நியமிக்கப்பட்ட இரு குழுக்கள் விசாரணை நடத்தி ஆபரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளன. திருமலையில் உள்ள வாடகை அறைகளில் செப்பனிடும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.
திருமலையில் நடைபெற உள்ள இரு பிரம்மோற்சவங்களின் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவைக் காண வரும் பக்தர்களுக்காக அன்னப் பிரசாதம், தங்கும் வசதி, லட்டு பிரசாதம் உள்ளிட்ட வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. பிரம்மோற்சவ நாள்களில் அனைத்து முதன்மை தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிரம்மோற்சவ வாகனச் சேவைகள் தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. அவ்விழா நாள்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
ரூ.98 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி சேவா சதன் கட்டடம், பிரம்மோற்சவத்திற்கு முன் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது என்றார் அவர்.