ஹைதராபாத்: ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரண்டு குற்றவாளிகளான அனீக் சபீக் சயீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
ஹைதராபாத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி லும்பினி பார்க் மற்றும் கோகுல் சாட் ஆகிய இரண்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் 42 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை செய்த சிறப்பு புலனாய்வு பிரிவு, இந்தியன் முஜாகிதின் அமைப்பைச் சேர்ந்த அனீக் சபீக் சயீத், அக்பர் இஸ்மாயில் சவுத்ரி, முகமத் சாதிக் மற்றும் அஹமத் பாதுஷா ஷேக் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மூன்று குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஹைதராபாத் பெருநகர இரண்டாவது குற்றவியல் நீதிமன்றம் கடந்த மாதம் 27-ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்பிறகு, செப்டம்பர் 4-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் கடந்த 4-ஆம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம் கைது செய்யப்பட்ட நால்வரில் இருவர் குற்றவாளி என்றும் இருவரை விடுதலை செய்வதாகவும் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் தண்டனை விபரம் இன்று (திங்கள்கிழமை) அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
அதன்படி, இந்த வழக்கின் குற்றவாளிகளான அனீக் சபீக் சயீத் மற்றும் அக்பர் இஸ்மாயில் சவுத்ரி ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கின் குற்றவாளிகள் தங்குவதற்கு அடைக்கலம் அளித்த தாரிக் அஞ்சுமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பு அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.