ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை: உலக சுகாதார நிறுவனம்
உலக அளவில் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக தற்கொலை தடுப்பு தினம் கடந்த திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் என்ற வேறுபாடுகள் ஏதுமின்றி, அனைத்து நாடுகளிலும் தற்கொலை நிகழ்வு அரங்கேறி வருகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் தற்கொலை அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில், ஐந்தில் 4 பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
உலகில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் இறப்புக்கு, இரண்டாவது அதிகபட்ச காரணமாக தற்கொலை' உள்ளது. இத்தோடு, தற்கொலையில் இறப்பவர்களுக்கும், தற்கொலைக்கு முயல்பவர்களுக்குமான எண்ணிக்கை விகிதம் 1:20 ஆக உள்ளது.
தற்கொலை முடிவுகள் அனைத்தும் உணர்ச்சிவசப்பட்ட நிலைகளில், குறுகிய கால இடைவெளியில் வேகமாக எடுக்கப்படுகின்றன. உலக அளவில் 38 நாடுகளில் மட்டுமே தற்கொலைத் தடுப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்கொலைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.