ஐஆர்சிடிசி உணவக ஒப்பந்த முறைகேடு வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் உள்ளிட்டோருக்கு அழைப்பாணை (சம்மன்) அனுப்புவது குறித்து வரும் 17-இல் தில்லி நீதிமன்றம் முடிவு செய்யவிருக்கிறது.
ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்த காலகட்டத்தில் ராஞ்சி, புரியில் உள்ள ஐஆர்சிடிசிக்கு சொந்தமான இரு உணவகங்களை பராமரிக்கும் பணியை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக லாலு, ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் அடிப்படையில் லாலு உள்ளிட்டோருக்கு அழைப்பாணை அனுப்புவதா? வேண்டாமா? என்பது குறித்த உத்தரவு வரும் 17-ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.