பெட்ரோல்-டீசல் மீதான விலை நிர்ணயம் மத்திய அரசின் கொள்கை சார்ந்தது என்பதால் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
பெட்ரோல் - டீசல் மீது நாள்தோறும் மாற்றியமைக்கப்படுவதை எதிர்த்து பூஜா மகாஜன் என்பவர் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில்,
"பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை இஷ்டம் போல் உயர்த்திக் கொள்வதற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலின்போது பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலையை மாற்றியமைக்கும் நடவடிக்கையை 22 நாள்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு சர்வதேச காரணிகளே காரணம் என்று மத்திய அரசு தவறான தகவலை பரப்பி வருகிறது.
இதுதொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் முன்பு வழக்குத் தொடுத்தேன். அதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசை அணுகும்படி கேட்டுக் கொண்டு, எனது வழக்கை தள்ளுபடி செய்தது. இதன்படி, மத்திய அரசை நான் அணுகினேன். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்தப் பதிலையும் அளிக்கவில்லை" என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன் மற்றும் நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று விசாரித்தனர். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான விலை நிர்ணயம் மத்திய அரசின் கொள்கை ரீதியிலான முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்க முடியாது. அதனால், இந்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.