குஜராத் மாநில கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த இந்திய மீனவர்கள் 18 பேர், பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம், போர்பந்தரைச் சேர்ந்த 12 மீனவர்கள் 2 படகுகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீன்பிடிக்க சென்றனர். இதேபோல், ஒகா பகுதியைச் சேர்ந்த 6 மீனவர்களும் தனி படகில் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் 18 பேரும், 3 படகுகளில் குஜராத் கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லை அருகே செவ்வாய்க்கிழமை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடலோர பாதுகாப்பு படையினர், 18 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 3 படகுகளையும் பறிமுதல் செய்து பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் எடுத்து சென்றனர்.
கடந்த 3 மாதங்களாக குஜராத் கடற்பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்துக்கு வசதியாக மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை காலம், கடந்த மாதம் 15ஆம் தேதிதான் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, குஜராத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் கடலோர பாதுகாப்புப் படையினர் 18 மீனவர்களை கைது செய்துள்ளனர்.