2014 பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ், எதிர்க்கட்சிக்கான பணியை செய்யவும் தவறிவிட்டதாக பிரதமர் மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஜெய்ப்பூர், நவாடா, காஸியபாத், ஹஸாரிபாத் மற்றும் மேற்கு அருணாச்சல் ஆகிய 5 மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த பாஜக கட்சியினரிடம் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றினார். அப்போது, அவர் பேசுகையில்,
"கடந்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் அவரது கூட்டணிகளின் உண்மை வெளியாகியுள்ளது. முன்னதாக ஊழல், நல்ல அரசை வழங்க தவறியது உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அவர்களை வெளியேற்றினர். தற்போது, எதிர்க்கட்சிக்கான பணியை செய்யவும் காங்கிரஸ் தவறிவிட்டது.
ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்காக, நிறைய திறமையான காங்கிரஸ் உறுப்பினர்கள், தங்களது உழைப்பை தியாகம் செய்ய வேண்டும். களப் பணிகளை செய்து கட்சிக்காக உழைத்த காங்கிரஸ் உறுப்பினர்களின் உழைப்பு ஒரு குடும்பத்துக்கு மட்டும் பலன் அளிப்பதை எண்ணி கவலை கொண்டிருக்கிறேன்.
பாஜகவின் தலைமைப் பதவிகள் உழைப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும், உறவின் அடிப்படையில் அல்ல.
அனைவரையும் ஒன்றிணைத்து முன்நோக்கி கொண்டு செல்லும் தைரியம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது. வேறு எந்த அரசியல் கட்சிக்கும் அது கிடையாது.
மத்திய அரசை குறிவைக்க எதிர்க்கட்சியினர் பிரச்சாரங்கள், சுட்டுரை பதிவுகள் என புதிய முயற்சிகளை கொண்டு வர வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இந்த சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் படைகளுக்கு எதிராக நாம் தொடர்ந்து போராடுவோம்" என்றார்.