அருண் ஜேட்லி - விஜய் மல்லையா சந்திப்புக்கு சிசிடிவி ஆதாரம் உள்ளது: காங்கிரஸ் எம்.பி தகவல்
புது தில்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் தொழிலதிபர் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசியதற்கு சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி புனியா தகவல் தெரிவித்துள்ளார்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் 2016-ஆம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்ச சென்றார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.
புதனனன்று லண்டன் நீதிமன்றத்தில் ஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜேட்லி இதனை தீவிரமாக மறுத்திருந்தார். அதேசமயம் மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியும் தனது ட்விட்டர் கருத்து பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருண் ஜேட்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் தொழிலதிபர் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசியதற்கு சிசிடிவி ஆதாரம் உள்ளது என்று காங்கிரஸ் எம்.பி புனியா தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய புனியா கூறியதாவது:
இந்தியாவை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்ற மத்திய அரங்கத்தில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என்பது தெரியவரும்
இவ்வாறு புனியா தெரிவித்தார்.