புது தில்லி: இளம்பெண்ணை கண்மூடித்தனமாகத் தாக்கிய தில்லி காவல் ஆய்வாளரின் மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் தில்லி அலுவலகம் ஒன்றில் கண்மூடித்தனமாகத் தாக்கும் விடியோ சில நாட்களுக்கு முன்னதாக இணையத்தில் வைரலாகப் பரவியது. அதில் காணப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் தில்லி லீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர் தில்லி காவல்துறையில் ஆய்வாளராகப் பணியாற்றும் அசோக் சிங் தோமரின் மகன் ரோஹித் தோமர் என்பது தெரிய வந்தது. குறிப்பிட்ட சம்பவம் கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி, தில்லி உத்தம் நகரில் உள்ள அலுவலகம் ஒன்றில் நடந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விடியோ:
அதனைத் தொடர்ந்து குற்ற நோக்கத்துடன் இளம்பெண்ணின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் நடந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை துணை ஆணையர் மோனிகா பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குறிப்பிட்ட இளைஞர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தில்லி காவல்துறை ஆணையர் அமுல்யா பட்நாயக்கிற்கு தொலைபேசி மூலம் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.