ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு மகாராஷ்டிர நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2010-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் கோதாவரி ஆற்றின் குறுக்கே பாப்ஸி என்ற அணையைக் கட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் 144 தடை உத்தரவை மீறி அணையை முற்றுகையிட முயற்சித்தனர். இதனால் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பான வழக்கு மகாராஷ்டிரா மாநிலம், துர்ஹமபாத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஆஜராக சந்திரபாபு நாயுடுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் ஒருமுறைகூட ஆஜராகவில்லை. இந்தநிலையில், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 16 பேரும் இம்மாதம் 21ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் அதில் தெரிவித்துள்ளது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் பின்னணியில் மோடி, அமித்ஷாவின் சதிச்செயல் உள்ளது என்று தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித்தொடர்பாளர் லங்கா தினகர் குற்றம்சாட்டியுள்ளார்.