புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளை, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சொந்த தொகுதியான வாராணசியில் கொண்டாட திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து உத்தரப்பிரதேச அரசு நிர்வாகம் வெளியிட்டிருக்கும் தகவலில், பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 17ம் தேதி தனது பிறந்தநாளை, தான் வெற்றி பெற்ற மக்களவைத் தொகுதியான வாராணசியில் கொண்டாட முடிவு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய நிகழ்ச்சி குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரப்பிரதேச அரசுக்கு வந்திருக்கும் கடிதத்தில், பிரதமர் மோடி செப்டம்பர் 17ம் தேதி வாராணசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'செல்லுங்கள் வெற்றி பெறுங்கள்' என்ற படத்தை பள்ளி மாணவர்களுடன் கண்டு களிக்கவிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வாராணசியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொகுதி மக்களுக்கு வழங்க உள்ளார். மேலும், கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களையும் திறந்து வைக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் வாராணசி வந்த பிரதமர் நரேந்திர மோடி ரூ.487 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 12 திட்டங்களைத் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.