பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கோவாவில் இன்று பாஜக முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது.
கோவாவின் முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்து பாஜக மூத்தத் தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
கணையப் புற்றுநோய் பாதித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய மனோகர் பாரிக்கர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதை அடுத்து அவர் கோவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை வழங்கியதன்படி, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
உடல்நிலை காரணமாக நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாமல் இருப்பதால், முதல்வர் பதவியில் இருந்து விலக மனோகர் பாரிக்கர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.