பெட்ரோல், டீசல் விலை உயர்வால் நொந்து போயிருக்கும் பொதுமக்கள் மத்திய அரசு எதைச் சொன்னாலும் செய்தாலும் சமூக வலைத்தளங்களில் அதனை போட்டுத் தாக்கி வருகிறார்கள்.
இந்த நிலையில், மோடியின் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஏழை மகளிருக்கான இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் குறித்த விளம்பரப் பலகைகளை அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் வைக்குமாறு பெட்ரோலியம் நிறுவனங்கள் அனைத்து பெட்ரோல் ஏஜெண்டுகளையும் வலியுறுத்தியிருப்பதாக கடந்த வாரம் செய்தி வெளியானது.
பொதுமக்கள் பார்வை படும் இடத்தில் மோடியின் படத்துடன் இந்த திட்டம் குறித்த விளம்பரப் பலகை வைக்காவிட்டால், அந்த பெட்ரோல் பங்குக்கு, பெட்ரோல் அனுப்புவது நிறுத்தப்படும் என்று நேரடியாகவே மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த வகையில் ஏற்கனவே இந்த கட்டளைக்குக் கீழ்படிந்து ஒரு பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்ட விளம்பரப் பலகையில் ஏதோ ஒரு அமைப்பு (அப்படித்தான் சொல்வார்கள்?) தனது சில்மிஷத்தை செய்து கனக்கச்சிதமாக முடித்துள்ளது.
அதாவது, மஞ்சள் பின்னணியில், கருப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கும் ஹிஸ்தி ஸ்டிக்கர் என்ன சொல்கிறது என்றால், 'நரேந்திர மோடியின் வசூல் மையம்' என்று பெட்ரோல் பங்கைக் குறிப்பிடும் வாசனம் அமைந்துள்ளது. ஹிந்தியில் நரேந்திர மோதி வசூலி கேந்திரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அவ்வழியாகப் போவோர் வருவோரெல்லாம் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதற்கு ஒரு சிலர், இதனை அனைத்து உள்ளூர் மொழிகளிலும் மொழிபெயர்த்து போஸ்டர்களில் ஒட்ட வேண்டும் என்று சுய விருப்பத்தையும் பகிர்ந்துள்ளனர்.