கேரள முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று விட்டதால் வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகள் முடங்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எம்.ஹாசன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: முதல்வர் பினராயி விஜயன் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கடந்த 2-ஆம் தேதி சென்றார். அதன்பிறகு, நிர்வாகப் பணிகள் முடங்கிவிட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு உதவித்தொகை ரூ.10,000 உடனடியாக வழங்கப்படவில்லை. இந்த உதவித் தொகை 48 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் என்று மாநில அரசு உறுதி அளித்திருந்தது என்றார் ஹாசன்.
இதுவரை, "5.70 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை உடனடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளுக்காக ரூ.1,236 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது' என்று கேரள அரசு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.